கோவை: கடந்த 3ம் தேதி இரவு 9 மணிக்கு மத்திய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர், ‘‘கோயமுத்தூர்ல உக்கடம் பெரியகுளம், குனியமுத்தூர் என ரெண்டு இடத்துல குண்டு வெச்சாச்சு. இதுக்கு ரிமோட் கன்ட்ரோல் மார்க்கெட்டுல வேலை செய்யற ஜான்சாதான். அவனோட செல்போனுக்கு யாராவது கூப்பிட்டா உடனே குண்டு வெடிச்சுரும். அப்படி செட்டப் செஞ்சாச்சு. முடிஞ்சா குண்ட கண்டுபிடுங்க பாக்கலாம்’’ எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். செல்போனில் பேசியது பச்சை மிளகா என அழைக்கப்படும் மார்க்கெட் கலாசு தொழிலாளி பீர் முகமது (40) என போலீசார் கண்டறிந்தனர். இவர் மீது வெடிகுண்டு மிரட்டல் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசில் பீர் முகமது கூறியது: என்னை யாராவது கொலை செஞ்சுருவாங்கன்னு பயமாக இருக்கு. அதனாலதான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன். என்னை ஜெயில்ல போட்டா நிம்மதியா இருப்பேன். எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குது’ எனக்கூறியுள்ளார். இதையடுத்து இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 5 முறை வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்.